ஹோட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

சேலம்,:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கலைமகள் தெருவை சேர்ந்தவர் பாலதர்ஷன், 21. இவர் பி.எஸ்.சி. கேட்டரிங் முடித்து விட்டு கடந்த 7 மாதங்களாக மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ேஹாட்டலில் வேலை செய்து வருகிறார்.


கடந்த 19ல் நள்ளிரவு, 12:10 மணிக்கு வேலை முடித்து விட்டு, தங்குமிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பகுதியில் மரத்தின் கீழ் நின்றுக்கொண்டிருந்த 4 பேர் பாலதர்ஷனை மிரட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர் வைத்திருந்த மொபைல்போனை பறிக்க முயன்ற போது பாலதர்ஷன் இறுக்க பிடித்துள்ளார்.


அப்போது ஒரு வாலிபர் அருகில் இருந்த மட்டையை எடுத்து பாலதர்ஷனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த பாலதர்ஷனை, ஹோட்டல் ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாலதர்ஷன் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சூரமங்கலம், அந்தோணிபுரம், ராம்தியேட்டர் பின்புறம் பகுதியை சேர்ந்த பூவரசன், 20, பீர்மைதீன், 25, குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்த கண்ணன், 21 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர்
பாலதர்ஷனை தாக்கியது தெரியவந்தது.


இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் நான்கு பேரும், கடந்த 21ல் தனியார் கல்லுாரி அருகே உள்ள ஜூஸ் கடையில் திருடியதும், கடந்த 17ல் கருப்பூர் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லேப்டாப், பணம் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நான்குபேரையும் கைது செய்து சிறையில் நேற்று அடைத்தனர்.

Advertisement