வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித் ஷா

6

ஸ்ரீவிஜயபுரம்: வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். பின்னர் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது;

நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை. அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார்.

சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு தொடர்ந்து கொண்டே இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார். வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.

சுதந்திரத்துக்கு முன்பாக, அந்தமான் நிகோபாருக்கு கொண்டு வரப்பட்ட நபர். சிறையில் இருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.

ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திர போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Advertisement