டிச.,31-ல் ராமர் கோவில் பிரதிஷ்டை 2 ஆண்டு துவக்க விழா

லக்னோ: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தொடர்ந்து சட்ட போராட்டம் நடந்து வந்தது. சட்ட போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததையடுத்து ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2024 ம் ஆண்டு பொதுமக்களின்வழிபாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2-ம் ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி கோவிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு விழா டிச., 31 ம் தேதி கொண்டாடப்படும். விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

அப்போது ஏழு உப கோயில்களின் கோபுரங்களில் கொடியேற்ற உள்ளனர். முன்னதாக விழா கொண்டாட்டத்திற்கான சடங்குகள் வரும 27-ம் தேதி துவங்க உள்ளது. அதில் கொடிகளுக்கான பூஜைகளும் அடங்கும். மேலும் கொடியேற்றப்பட உள்ள கொடிகளின் வடிவம் குறித்து ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு உள்ளன.

முன்னதாக கடந்த நவ.,25-ம் தேதி பிரதமர் மோடி மாநில வருகையின் போது கோவில் பிரதான கோபுரத்தில் கொடி ஏற்றினார். அதே நேரத்தில் ​​சிவன், சூரியன், கணபதி, அனுமன், பகவதி, அன்னபூரணி மற்றும் சேஷாவதாரர் கோயில்களின் கோபுரங்களிலும் கொடியேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கோவிலில் பணிகள் நிலுவையில் இருந்ததால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது அலங்காரப் பணிகள் உட்பட ஏழு கோயில்களும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 'பிரதிஷ்டா துவாதசி' கொண்டாட்டத்தின் போது கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறக்கட்டளை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement