பரிதாபத்தில் அதிகாரிகள்!

'இவர்கள் கொடுத்து வைத்தவர்கள்; தப்பித்து விட்டனர்...' என, பீஹாரில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பார்த்து பொறாமைப்படுகின்றனர், அங்குள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.

இதற்கு காரணம், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார். பெரும்பாலான மாநிலங்களில், முதல்வராக இருப்பவர்கள் தான், உள்துறையையும் சேர்த்து கவனிப்பர். அதாவது, போலீஸ் துறை, முதல்வர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால் பீஹாரில், நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும், உள்துறை இலாகா, பா.ஜ.,வைச் சேர்ந்த, துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் உள்ளது. அதே நேரத்தில், அரசின் நிர்வாக பொறுப்பு நிதிஷ் குமாரிடம் தான் உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இவரது கட்டுப்பாட்டில் தான் செயல் படுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக, பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அழைத்து அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார், நிதிஷ் குமார்.

'எப்படி நேர்மையாக செயல்படுவது; மக்களுடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்வது' என, ஏகப்பட்ட ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்குகிறார். சில நேரங்களில், இந்த கூட்டங்கள் மணிக்கணக்கில் நீடிக்கின்றன.

இதனால், நொந்து போன ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 'நல்லவேளை... முதல்வரிடம் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தப்பித்து விட்டனர்' என, புலம்புகின்றனர்.

Advertisement