'தகதகக்குது' தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை

கோவை: தமிழகத்தில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, நேற்று ஒரு லட்சம் ரூபாயை தாண்டி, புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பின், தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்ந்து நீடித்து வந்தன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து, காலை, மாலையில் விலையில் மாற்றங்கள் நீடித்தன.

டிச. 12 ம் தேதி, ஒரு சவரன் ரூ.98,000 க்கும், டிச. 13 ம் தேதி, 960 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 98,960 ஆக உயர்ந்தது. டிச. 14 ஞாயிற்றுகிழமை என்பதால், விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நேற்று மீண்டும் காலை, மாலையில் உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,515 ஆகவும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 120 ஆகவும் உயர்ந்தது.

சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வரும் நிலையில், தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என, நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின், 'மெட்டல்ஸ் மினரல்ஸ்' நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்து, 'பேம்ப்' நிறுவனத்தின், வர்த்தக கூட்டாளியான கயிலை ராஜன் கூறுகையில், '' தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. டாலருக்கான வட்டி குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இதோடு, சீனா, ரஷ்யா நாடுகளின் மத்திய வங்கிகளும், தங்கத்தை அதிகளவில் வாங்குகின்றன. ரஷ்யா- உக்ரைன் போர், சீனா-தைவான் இடையேயான பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக பலரும் கருதுகின்றனர். இதனால், தங்கத்தின் விலை சரிய வாய்ப்பு குறைவே,'' என்றார்.

Advertisement