அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறை: காணொலியில் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட அரசு பள்ளிகளில், புதிய வகுப்பறை கட்டடங்கள், நுாலக கட்டடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், சென்னை தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உனிச்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் பொது நுாலகத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நுாலக கட்டடங்கள் என மொத்தம், 3.67 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறையில் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
அதேபோல், பொதுநுாலகத்துறை சார்பில், தலா, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மரிக்கம்பள்ளி, சுண்டேகுப்பம், பனகமுட்லு மற்றும் பர்கூர் தொகுதியில் மஞ்சமேடு, வாடமங்கலம், பெரிய புளியம்பட்டி ஆகிய பகுதிகளில், 1.32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நுாலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
உதவி செயற்பொறியாளர் பர்வீனா, உதவி பொறியாளர் முனிரத்தினம், மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement