மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை திமுக வீணாக்குகிறது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

2

சென்னை: மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை திமுக வீணாக்குகிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தை இருட்டில் திமுக அரசு மூழ்கடிக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை.
உப்பூர், எண்ணூர், கொல்லிமலை மற்றும் குந்தா நீர் மின் நிலையங்களில் கட்டுமானப் பணிகளே முடங்கியுள்ளன. மேலும், கட்டுமானப் பணிகள் முடிந்த வட சென்னை மற்றும் உடன்குடி மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.


கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மின்சாரக் கொள்முதல் செலவு 60% உயர்ந்துள்ளது. அதிலும், 2024ல் மட்டும் ரூ.28,772 கோடிக்குத் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்திருப்பது, கமிஷன் கல்லா கட்ட தான் திமுக அரசு மின் உற்பத்தியை முடக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதே திமுக அரசுதான் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்து, 20,000 மெகாவாட் மாசற்ற மின் உற்பத்தி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் எண் 231ல் கூறியது.

கொடுத்த வாக்குறுதியை மறந்து, கஜானாவை வழித்தெடுத்து, மின் உற்பத்தியைக் கிடப்பில் போட்டு, கமிஷன் கல்லா கட்ட தனியாரிடம் மின் கொள்முதல் செய்யும் இருண்ட மாடல் திமுக அரசு, விடியல் அரசு எனக் கூற வெட்கப்பட வேண்டும்.


புதிதாக ஒரு மெகாவாட் கூட மின்சாரம் உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி தமிழக மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement