போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
புதுடில்லி: பொறியியல், மருத்துவம் மற்றும் மத்திய பல்கலைகளின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில், கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது என பல சர்ச்சைகள் எழுந்தன.
தேர்வில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அப்போது குழு அமைக்கப்பட்டது. அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தி பரிந்துரைகளை சமர்ப்பித்தனர். அதை படிப்படியாக தேசிய தேர்வு முகமை செயல்படுத்தி வருகிறது.
இனி, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நிகழ்நேர புகைப்பட பதிவு, தேர்வின் போது, 'டிஜிட்டல்' வாயிலாக முக அடையாளத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது.
அடுத்த மாதம் ஜே.இ.இ., எனப்படும் ஐ.ஐ.டி., மற்றும் நாட்டின் முக்கிய பல்கலைகளுக்கான முதன்மை நுழைவுத் தேர்வில் இதை அறிமுகப்படுத்த உள்ளனர்.