'தற்போது வர உள்ள தேர்தல் மாறுபட்ட தத்துவப்போர்'

ஓமலுார்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம், ஓமலுார் கிழக்கு ஒன்றியம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஓமலுாரில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

தி.மு.க., துணை பொதுச்செயலர் சிவா பேசியதாவது: எம்.ஜி.ஆர்., காலத்திலேயே, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு, வலுவான இளைஞரணி தான் காரணம். கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அடைந்தனர். தற்போது வர உள்ள தேர்தல் என்பது முற்றிலும் மாறுபட்ட தத்துவப்போர். எப்பேர்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும், உங்கள் வீடுகளை தேடி வரக்கூடும். மக்களாகிய நீங்கள் தான் நீதிபதி. நீங்கள் அளிக்கும் தீர்ப்புதான் முக்கியம்.

வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. ஆனால் வடக்கே இருந்தும் வரும் தத்துவம், 'ஒரு மொழி, ஒரே தேர்தல்' என, தமிழக தனித்தன்மையை சீர்குலைக்க எண்ணுகின்றனர். நிதி விடுவிப்பதிலும் சுணக்கம் காட்டி, கூடுதல் சுமைகளை கொடுக்கின்றனர். அதனால் தான், அவர்களிடம் இருந்து, 'தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல்' என, முதல்வர் தெரிவிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தையல் இயந்திரங்கள், சலவைப்பெட்டி, மருந்து பெட்டகம், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலர்களான, ஓமலுார் ரமேஷ், செல்வகுமரன், காடையாம்பட்டி அறிவழகன், தாரமங்கலம் அய்யப்பன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement