வாழப்பாடியில் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு

ஆத்துார்: வாழப்பாடியில் பழமையான சதிக்கல்லை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்.


கடந்த, 17, 18ம், நுாற்றாண்டு காலத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த ஆண் மகனுக்கு வைக்கப்பட்ட தீயில், அவரது மனைவியும் உயிரிழக்கும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. அப்படி தம்பதியர் இறந்தால் அவர்களுக்கு, 'சதிக்கல்' வைப்பர். அந்த கற்கள் பெரும்பாலும், அவரவர் வாழ்விட பகுதிகளில் உள்ள மக்களின் நன்மைக்கு உயிரிழந்த கணவர், மனைவிக்குத்தான் வைத்துள்ளனர். அப்படி ஒரு கல்லை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், கடந்த, 20ல் கண்டறிந்தனர்.


இதுகுறித்து ஆய்வு செய்த பின், அவர்கள் ஆத்துாரில் நேற்று அளித்த பேட்டி: வாழப்பாடி, மத்துார் மாரியம்மன் கோவிலில் ஒரு சதிக்கல் இன்றளவும் வழிபாட்டில் உள்ளது. இதை நாங்கள் கண்டறிந்து, சில ஆண்டுக்கு முன் ஆவணப்படுத்தினோம். தற்போது வாழப்பாடி, வடக்கு காட்டில், விவசாயி சிவக்குமார், 35, தோட்டத்தில், 17 அல்லது 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்து, மக்களுக்கு நன்மை செய்வதற்காக உயிரிழந்த ஆண் மகன், அவரது பிரிவை தாங்க முடியாமல் உடன்கட்டை ஏறிய மனைவியின் தியாகத்தை போற்றுவதற்கு வைக்கப்பட்ட சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கல்லை, கட்டையகவுண்டர் பெயரில், இன்றும் குறிப்பிட்ட மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 3 அடி உயரம் கொண்ட, அந்த சதிக்கல்லில் உடலின் அழகிய ஆபரணங்கள், தலையில் கொண்டை, இடுப்பில் கூர் வாளுடன் இருகரம் கூப்பி கும்பிட்டபடி, ஆண் மகன் உருவம், அருகே மேல்நோக்கிய இடது கையில் மலர், கீழ் நோக்கி வலது கையில் ஒரு குடுவை வைத்துள்ளபடி பெண் உருவம் உள்ளது. தவிர சதிக்கல் அருகே உருவம் தெரியாத அளவு சிதைந்தபடி, இரு நினைவு கற்கள் உள்ளன. 300 ஆண்டுக்கு மேலாக, இந்த சதிக்கல்லை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement