இளைஞரணியில் இருந்து 40 வேட்பாளர்கள்: வீட்டில் விருந்தளித்து தேர்வு செய்த உதயநிதி
சென்னை: தி.மு.க., இளைஞர் அணி கோட்டாவில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி வீட்டில், இரவு விருந்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தொடர, தி.மு.க., தலைமை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பிலும் உள்ள அதிருப்திகளை சரி செய்ய, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
மகளிர் இலவச பேருந்து பயண திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுக்கும் என ஆணித்தரமாக, தி.மு.க., தலைமை நம்புகிறது.
நடிகர் விஜய் கட்சி துவக்கியதைத் தொடர்ந்து, தேர்தலில் இளைஞர்களை, அதிக அளவில் களமிறக்க வேண்டிய கட்டாயம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இளைஞர் அணியில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தி.மு.க., இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர் உதயநிதியின், சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லம் வீட்டில், நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதுகுறித்து, இளைஞர் அணி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., இளைஞர் அணி ராணுவ கட்டுப்பாடு கொண்டது. பா.ஜ.,வை சேர்ந்த தலைவர் ஒருவர், 'உதயநிதியை அடக்கி வையுங்கள்' என, பேட்டி வாயிலாக, முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார். இதில் இருந்தே, நாம் சரியான வழியில் பயணிக்கிறோம் என்பது தெரிகிறது.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த தேர்தலில், 200 தொகுதிகளில் வென்று காட்ட வேண்டும். இதற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் பங்களிப்பு அவசியம் என, உதயநிதி தெரிவித்தார். மேலும், இளைஞர் அணியில் இருந்து, 40 வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் அணியினருக்கு, மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, மீன் வறுவல், பிரட் அல்வா, சிக்கன் வறுவல், ஆனியன் ரைதா, கத்தரிக்காய் தொக்கு உள்ளிட்ட உணவு வகைகள் பறிமாறப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.