மாவட்ட ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.

கோபால்பட்டி அருகே மத நல்லிணக்கத்தோடு பள்ளிவாசலில் துவா செய்துவிட்டு, மண்டல பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலையிடும் பக்தர்கள் தொடர்ந்து 41 நாட்கள் விரதமிருப்பது ஒரு மண்டல காலமாக கணக்கிடப்படுகிறது. நவ. 16-ல் தொடங்கிய மண்டல காலம் நேற்று இரவுடன் நிறைவுப்பெற்றது. 41 நாள் நிறைவையொட்டி, திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பன், பகவதியம்மன் சமேத ஸ்ரீ ஸ்படிகலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தில் மண்டல பூஜை நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

கோபால்பட்டி: வேம்பார்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வேம்பார்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக நேற்று மண்டல பூஜை அன்னதானவிழா நடந்தது. பின் மத நல்லிணக்கத்துடன் வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்றனர். பள்ளிவாசலில் அசரத் பாத்தியா ஓதி துவா செய்தனர். தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் ஐயப்பன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது.

வத்தலக்குண்டு: கலியுக வரத ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. மஞ்சளாறு விநாயகர் கோயிலில் ஐயப்ப பக்தருக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது .உடல் முழுவதும் அலகு குத்திய பக்தர் முதுகில் குத்தப்பட்ட அலகால் ஐயப்பன் உருவப் படத்துடன் கொண்ட மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்து வந்தார்.

ஏழு கன்னிமார் சாமிகள் வழி நடத்த, தேர் ஊர்வலம் வத்தலக்குண்டு முக்கிய வீதிகளில் நடந்தது.

சின்னாளபட்டி : பஸ் ஸ்டாண்ட் ஐயப்பன் கோயிலில், சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் சுவாமிநாத சுவாமிகள் சபரிமலை யாத்திரை குழுவின் மண்டல பூஜை நடந்தது.

அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றம், சிறப்பு மலர் அலங்காரம், அபிஷேக ஆராதனைகளுடன் குருபூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புஷ்பாஞ்சலி, மண்டலாபிஷேகத்துடன் பக்தி பஜனை, சக்தி பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையுடன் அன்னதானம் நடந்தது. விழாவில், முக்கிய வீதிகளில் ரத ஊர்வலம் நடந்தது.

Advertisement