ஜாக்டோ ஜியோ ஆயத்த மாநாடு

திண்டுக்கல்: காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் வகையில், திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆயத்த மாநாடு நடந்தது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜன.6 முதல் மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைமுன்னிட்டு மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடு நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர், முருகன், ராஜாக்கிளி, முபாரக் அலி, ஜோசப் சேவியர், ஜெசி தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ், உயர்மட்டக்குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினர். நிர்வாகிகள் வீரகடம்ப கோபு, முருகானந்தம், மகாலிங்கம், சுரேஷ்குமார் கலந்துகொண்டனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவரும் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில், பேச்சுவார்த்தை என அழைத்துப்பேசி கருத்துக்கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தியதற்கும், சில சங்கங்களை மட்டும் அழைத்து பேசியதற்கும், ஓய்வூதியக்குழு காலக்கெடு முடிந்து 3 மாதங்கள் ஆன நிலையில், அதன் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதற்கும் கண்டனம் தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement