டிச. 31ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மா,செ. கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

1

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிச.31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு படிவங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்று வருகின்றனர். டிச.31ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் அதே தினத்தில்(டிச.31) கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

டிச.31ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் தலைமையில் நடக்க உள்ளது. அன்றைய தினம், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர்.5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மிக குறுகிய காலத்தில் மீண்டும் ஒருமுறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிச. 31ல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகள், பூத் கமிட்டிகள் நிலவரம், கூட்டணி வியூகங்கள், வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Advertisement