இந்திய கலாசாரம் ஒவ்வொரு இந்தியனின் குடும்பமாகும்; கேரள கவர்னர் பேச்சு

பாலக்காடு: ''இந்திய கலாசாரம் ஒவ்வொரு இந்தியனின் குடும்பமாகும்,'' என்று கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு தாரைக்காடு கிராமத்தில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி சேவாசமதியின் சார்பில், வரும், 31ம் தேதி வரை நடக்கும் அதிருத்ர மகாயக்ஞம் கடந்த, 25ம் தேதி துவங்கியது.

பிரஹ்மஸ்ரீ வெங்கடேஸ்வர தீக்ஷிதரின் தலைமையில் நடக்கும் இந்த அதிருத்ர மகாயக்ஞத்தில், நேற்று கலந்து கொண்டு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேசியதாவது:

இந்திய கலாசாரம் ஒவ்வொரு இந்தியனின் குடும்பமாகும். அந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ளது. அதைச் செய்வது நமது கடமை.

நமது கலாசாரத்தின் மீது பல்வேறு படையெடுப்புகள் மற்றும் தாக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தியா இன்று உலகிற்கு தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது.

அதில் தோல்வியடைந்தால், தோல்வியடைவது நாம்தான், புதிய தலைமுறை அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கவர்னரை சேவாசமதியினர் சத்திய கும்பம் வழங்கி வரவேற்றனர்.

Advertisement