தமிழகத்தில் எங்கேயாவது கஞ்சா செடி வளத்தாங்கன்னு சொல்ல முடியுமா?; சபாநாயகர் அப்பாவு

4

திருநெல்வேலி: தமிழகத்தில் எங்கேயாவது ஒரு இடத்துல கஞ்சா செடி வளத்தாங்கன்னு சொல்ல முடியுமா? என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.


திருநெல்வேலியில் அரசின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபையில் மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் ரவி நீண்ட காலம் கிடப்பில் போட்டு விட்டு தற்போது திருப்பி அனுப்பியிருப்பது வருத்தத்திற்குரியது. 2026ம் ஆண்டு முதல் நடக்கயிருக்கும் சட்டசபை நிகழ்வுகளில் தமிழக சட்டசபை மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் கவர்னர் முறையாகக் காப்பார் என்று முழுமையாக நம்புகிறேன்.


தமிழகம் ஒரு ரூபாய் வரியாகக் கொடுத்தால் மத்திய அரசு நமக்குத் திரும்பக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே. ஆனால் உத்திரப் பிரதேசத்திற்கு ஒரு ரூபாய்க்கு 2 ரூபாய் 29 பைசா வழங்கப்படுகிறது. கல்வியிலும், தொழில்துறையிலும் பின்தங்கியிருக்கும் உத்திரப்பிரதேசத்துடன், அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் தமிழகத்தை ஒருபோதும் ஒப்பிட முடியாது.


2011ல் தி.மு.க., ஆட்சியின் போது கடன் ரூ.ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் அது ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. மத்திய அரசு நிர்ணயித்த கடன் வரம்பிற்கு உள்ளாகவே தமிழக அரசு தற்போது செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தில் எங்கேயாவது ஒரு இடத்துல கஞ்சா செடி வளத்தாங்கன்னு சொல்ல முடியுமா? தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை, அவை அண்டை மாநிலங்களில் இருந்தே கடத்தி வரப்படுகின்றன. ஆப்ரிக்காவிலிருந்து வரும் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் குஜராத்தில் உள்ள அதானி போன்ற தனியார் துறைமுகங்கள் வழியாகவே இந்தியா முழுவதும் பரவுகிறது. இதனைத் தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இவ்வாறு அப்பாவு கூறினார்.

Advertisement