காங்.,கில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது: கார்த்தி எம்.பி.,

காரைக்குடி: “காங்கிரசில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அவர் அளித்த பேட்டி:

வட மாநில இளைஞரை தாக்கி, 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டது கொடூரச்செயல். இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு காவல் துறை அடக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும், இப்படிப்பட்ட கொடூர செயல்களை வளர விடக் கூடாது.

அரசியலிலோ, சமூகத்திலோ, நம்மை விட மாறுபட்ட கருத்துகளோடு இருப்பவர்கள் மீது வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது. அரசியல் வாயிலாக உருவாகும் இந்த வெறுப்புணர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.

எனக்கு, காங்கிரசில் சுல்தானும் தெரியாது, சக்கரவர்த்தியும் தெரியாது. மேலிடத்தில் இருப்பதால், எதையாவது கருத்தைச் சொல்கின்றனர். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், நிறை குறை இருக்கத்தான் செய்யும்.

வாழ்வாதாரம் தேடி தமிழகத்திலிருந்து யாரும் உத்தர பிரதேசத்துக்கு போவதில்லை. அங்கிருந்து தான் இங்கு வருகின்றனர்.

அதை வைத்துப் பார்க்கப் போனால், தமிழகம் தான் வளர்ந்துள்ளது. இந்த உண்மையை புரியாமல் தான் பலரும் கருத்துச் சொல்கின்றனர். அந்தக் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement