சாத்துார் வடக்குரத வீதியில் கடைகளின் ஆக்கிரமிப்பால் அவதியில் மக்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாத்துார்: சாத்துார் வடக்குரத வீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடைகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாத்துார் வடக்கு ரத வீதியில் தனியார் திருமண மண்டபங்கள், ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர், காய்கறி மார்க்கெட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. மேலும் கீழரத வீதி, நாடார் தெரு, அருந்ததிய காலனி, பாரதி நகர், ஆகிய குடியிருப்பு பகுதிகளும் இந்த பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் வடக்கு ரத வீதி வழியாகவே நகருக்குள் வந்து செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், போன்றவை வடக்கு ரத வீதியில் வைத்தே நடைபெறுகிறது. மேலும் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்து வருவதால் வடக்கு ரத வீதியின் 100 அடி அகலம் உள்ள ரோடு குறைந்து 30 அடி ரோடாக மாறிவிட்டது.

இதன் காரணமாக நாளுக்கு நாள் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.நகராட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ரோட்டை விரிவு செய்ததால் நெரிசல் ஏற்படுவது குறைந்தது.

தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement