திறனற்ற முதல்வரிடம் சிக்கி தவிக்கும் தமிழகம்: பழனிசாமி

சென்னை: 'திறனற்ற முதல்வரிடம் சிக்கி தமிழகம் தவிக்கிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும், தினசரி செய்தியாகி இருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?

அடுத்த வினாடி யார், எந்த போதையில், நம்மை தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே, தமிழக மக்கள் வாழ வேண்டுமா? தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என்று வெட்கமே இல்லாமல் கூறும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த, 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ; ராமநாதபுரத்தில் 564 கிலோ; திருச்சியில் 4 கிலோ என, தமிழகத்தில் பிடிபட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா?

போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் - ஒழுங்கை காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்?

நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, திறனற்ற முதல்வரிடம் சிக்கி, தமிழகம் தவித்தது போதும். தி.மு.க., ஆட்சியிடம் இருந்து, தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக 2026 அமையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement