'சேவை செய்யும் எண்ணத்தை சிறுவயது முதல் வளர்க்கணும்'

சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' எனும் விழிப்புணர்வு சொற்பொழிவு மாதந்தோறும் நடக்கிறது. 47வது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.

'தரம் ஜாக்ரண் அமைப்பின் தென் பாரத அமைப்பாளர் ராம ராஜசேகர், 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற தலைப்பில் பேசியதாவது: பிறருக்கு சேவை செய்யும் எண்ணம், ஒவ்வொருவரின் ஆழ் மனதில் இருந்தும் எழ வேண்டும். அந்த சேவையை தாயுள்ளத்தோடு செய்ய வேண்டும்.

ஜாதி, மதம், இனம் பார்க்க கூடாது. ஏழையா, பணக்காரனா என பார்க்கக்கூடாது. இறைவனுக்கு செய்யும் சேவை என்பது மனிதனுக்கு செய்யும் சேவை.

மனிதனை கடவுளாக பாவிக்க வேண்டும். உதவி, தேவை என்று நம்மிடம் யார் வந்தாலும், எந்தவித பேதமும் பார்க்கக்கூடாது. அவர்களை நேசித்து அன்பு காட்டி உதவிட வேண்டும்.

அனைவரிடத்திலும் அன்பு காட்டுவோரை, இறைவன் தன் அருகில் வைத்துக் கொள்வான். சேவை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை போல், வேறு எதை செய்தாலும் கிடைக்காது.

சேவை செய்யும் எண்ணத்தை, சிறு வயது முதலே குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement