வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; மேலும் ஒருவர் மீது தீ வைப்பு

13

டாக்கா: வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.


இதைத்தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


தற்போது ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்.இது சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.


தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​தாக்குதல் நடத்திய ஒரு குழு அவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 15 நாட்களில் வங்கதேசத்தில் ஒரு ஹிந்து நபர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement