அணுசக்தி நிலையங்கள் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் தகவல் பரிமாற்றம்

2

புதுடில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியலை 1988 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளன.


இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் 1991ம் ஆண்டு ஜன.,27 ல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு 1992ம் ஆண்டு ஜன.,1 ம் தேதி முதல்,இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், ஜன., 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.


அந்த வகையில், தொடர்ந்து 35வது முறையாக இரு நாடுகளும் பரஸ்பரமாக அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டன. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை அளித்தது.

அதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பட்டியலை அளித்தது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாக உள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தப்படி அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement