குன்றத்து மலையில் சந்தனக்கூடு விழா: ஆடு, கோழி பலியிட ஐகோர்ட் தடை

4


மதுரை : 'மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மதுரை, மாணிக்கமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலையில் டிச., 21 முதல் ஜன., 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.


அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், ''தற்போதைய திருவிழா உரிமை பிரச்னை, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜன., 6ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கந்துாரி மகா உற்ஸவத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும். விலங்கு பலியிடுதல், அசைவ உணவு தயாரித்தல் கூடாது,'' என்றார்.


தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ''மலையில் கந்துாரி விழா நடத்தக்கூடாது. தரைப்பகுதியில் கந்துாரி நடத்தலாம். கந்துாரி என்ற வார்த்தைக்கு தடையில்லை,'' என்றார்.


நீதிபதி, ''ஏற்கனவே இரு தரப்பின் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என, கேள்வி எழுப்பினார்.


வாஞ்சிநாதன், ''அரசு எங்களை தான் ஒடுக்குகிறது. தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தான் கொடியேற்றப்படுகிறது,'' என்றார்.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை போலீசார் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜன., 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement