வெனிசுலாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது அமெரிக்கா; புரூக்ளின் சிறையில் மதுரோ அடைப்பு

11

காரகாஸ்: அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.



அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் ஒன்று வெனிசுலா. இந்த இரு நாடுகளையும் மெக்சிகோ வளைகுடா மற்றும் கரீபியன் கடல் இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக வெனிசுலா, அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
Latest Tamil News

ராணுவ நடவடிக்கை



இதை தடுப்பதற்காக, 'ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்' எனப்படும் 'தெற்கில் வேட்டை' எனும் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இதை, அமெரிக்காவின் கடற்படை செயல்படுத்தியது. கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான படகுகள், கப்பல்களை குண்டு வீசி அழித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இந்த பகுதிகளில் அமெரிக்க படைகள், 30 முறை தாக்குதல் நடத்தியுள்ளன; 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 29ம் தேதி போதை பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என கூறி, வெனிசுலாவின் படகு தளத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ., ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது .



இது, சமீபத்தில் வெனிசுலா மண்ணில் அமெரிக்கா நடத்திய முதல் நேரடி தாக்குதல்.
முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், போதை பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கத்துடன், வெனிசுலா மீது தீவிர தாக்குதல் நடத்தும் யோசனையும் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
Latest Tamil News

விருப்பம்



இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 1ம் தேதி மதுரோ வெளியிட்ட 'டிவி' உரையில், 'வெனிசுலாவில் வலுக்கட்டாயமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே இந்த அழுத்தம் தரப்படுகிறது; போதை பொருள் காரணமில்லை' என கூறினார்.



வெனிசுலாவின் அரசியல் சூழலும் அதிபர் மதுரோவுக்கு எதிராக உள்ளது. அதிபர் மதுரோ மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு உள்ளது. '2024 அதிபர் தேர்தலில் அவர் தோற்ற போதிலும், தேர்தல் கமிஷன் அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தது' என அமெரிக்கா கருதுகிறது. உள்நாட்டிலும் மதுரோவுக்கு எதிர்ப்பு அதிகரித்து உள்ளது.

அமெரிக்க வெளியுறவு கொள்கையின்படி மதுரோவை அவர்கள் அதிபராக ஏற்கவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கோன்சலேஸையே அதிபராக அங்கீகரித்துள்ளனர்.

போர் விமானங்கள்



இந்நிலையில், வெனிசுலா தலைநகர் காரகாஸ் மீது நேற்று அமெரிக்கா குண்டு வீசியது. அடுத்தடுத்து ஏழு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அங்குள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், போர் விமானங்கள் தாழ்வாக பறக்கும் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய ராணுவ தளத்திற்கு அருகே இத்தாக் குதல்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரகாஸ் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ளன.
Latest Tamil News
Latest Tamil News


இந்நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை :

கூட்டு முயற்சி



வெனிசுலா மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோரை அமெரிக்கப் படைகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளன. அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் அடைப்பு




வெனிசுலா அதிபர் மதுரோவை சிறை பிடித்த படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.





@block_Y@

ரூ.438 கோடி பரிசு அறிவிக்கப்பட்டவர்

அதிபர் டிரம்பின் முதல் பதவி காலத்தில் அமெரிக்க அரசு, மதுரோ மற்றும் பிற உயர்மட்ட வெனிசுலா அதிகாரிகள் மீது போதை பொருள் பயங்கரவாதம், ஊழல் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும், மதுரோவை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்கினால், 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. வெனிசுலாவில் மூன்றாவது முறையாக மதுரோ அதிபராக பொறுப்பேற்ற பின், அப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்த பரிசுத் தொகையை 210 கோடி ரூபாயாக உயர்த்தியது. இந்நிலையில், இரண்டாவது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், இந்த பரிசுத் தொகையை கடந்தாண்டு ஆகஸ்டில் 438 கோடி ரூபாயாக உயர்த்தினார். block_Y

Advertisement