அரசு சுகாதார நிலையத்தில் மது விருந்து; : 4 டாக்டர்கள் உட்பட ஐவர் 'சஸ்பெண்ட்'

காரைக்குடி: செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை மது குடித்து கொண்டாடிய நான்கு டாக்டர்கள் உட்பட ஐவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச., 31 இரவு, விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர்கள் சிலர், சிகிச்சைக்காக வந்துள்ளனர். டாக்டர்கள் இல்லாததால் அவர்களது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு சிலர் மதுபானம் குடித்து, சிக்கன் உட்பட பல்வேறு உணவுகளை சாப்பிட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடி இருப்பது தெரிந்தது.

அதை, அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ பரவிய நிலையில், தங்களுக்கு எதுவும் தெரியாது, யாரோ மது அருந்தி சென்றதாக பணியில் இருந்த டாக்டர், பணியாளர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக விசாரணை செய்த மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் சசிகாந்த், கவுஷிக், நவீன்குமார், மணிரத்னம், மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மீனாட்சி கூறுகையில், ''செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நான்கு டாக்டர்கள், ஒரு மருந்தாளுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நர்ஸ், ஊழியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது,'' என்றார்.

Advertisement