ஏக்நாத் ஷிண்டேவை வீழ்த்த கூட்டு சேர்ந்த பா.ஜ., - காங்.,: மஹாராஷ்டிராவில் அதிசயம்!

2

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள, அம்பர்நாத் நகராட்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு நகராட்சி தலைவர் பதவி கிடைப்பதை தடுக்க, உலக அதிசயங்களில் ஒன்றாக, பா.ஜ., - காங்., கூட்டு சேர்ந்துள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.


31 இடங்கள் தேவை



இதில், 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்பு களை கைப்பற்றி, ஆளும் மஹாயுதி கூட்டணி சாதித்தது. 50க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகளையே, காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அ டங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கைப்பற்றியது.

வரும் 15ல், ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது; 16ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில், 20 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் தாக்கரே - மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி வைத்துள்ளனர்.


அது போல, துணை முதல்வர் அஜித் பவார், தன் குருவான சரத் பவாருடன் சில மாநகராட்சிகளில் கை கோர்த்துள்ளார். அம்பர்நாத் நகராட்சியில் தேர்தல் முடிவு வெளியாகி, இரு வாரங்களுக்கும் மேலான நிலையில், தலைவர் பதவியில் இழுபறி நீடித்தது. மொத்தமுள்ள 60 இடங்களில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.


பெரும்பான்மைக்கு, 31 இடங்கள் தேவை. பா.ஜ., - 14; காங்., 12; அஜித் பவாரின் தேசியவாத காங்., 4 இடங்களில் வென்றன. இந்த சூழலில், நகராட்சி தலைவர் பதவி சிவசேனாவுக்கு கிடைக்கக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்துக்காக, முதன்முறையாக, பா.ஜ., - காங்., கூட்டு சேர்ந்து, 'அம்பர்நாத் விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்., மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் இடம் பெற்றுள்ளார்.


இதன்படி, 31 கவுன்சிலர்கள் ஆதரவுடன், அம்பர்நாத் நகராட்சியை பா.ஜ., - காங்., கூட்டணி கைப்பற்றியது. பா.ஜ., கவுன்சிலர் தேஜஸ்ரீ கரஞ்சுலே, நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டணியின் வியூகத்தால், தனிப் பெரும் கட்சியாக இருந்த போதும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அதிகாரத்தை இழந்துள்ளது.


அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ., - காங்., கூட்டு சேர்ந்த விவகாரம், மஹாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

'சஸ்பெண்ட்'



'இக்கூட்டணி முற்றிலும் தவறானது' என விமர்சித்த மாநில காங்., தலைமை, அம்பர்நாத் நகர காங்., பிரிவை கலைத்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், 12 கவுன்சிலர்களையும் கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.


இது குறித்து, ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ., பாலாஜி கினிகர் கூறுகையில், ''காங்கிரசை ஒழிப்போம் என, வாய்க்கிழிய பேசும் பா.ஜ., அதிகாரத்திற்காக அதே காங்கிரசை கட்டிப்பிடிப்பது அரசியல் நயவஞ்சகம்,'' என, விமர்சித்தார்.


இதற்கிடையே, அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் நகராட்சியில், அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., உடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

@quote@

முற்றிலும் தவறு!



காங்., - ஏ.ஐ.எம்.ஐ.எம்., உடனான கூட்டணியை ஒருபோதும் ஏற்க முடியாது. உள்ளூர் பா.ஜ., நிர்வாகிகள் தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுத்திருந்தால், அது முற்றிலும் தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய கூட்டணிகளை ரத்து செய்ய உத்தரவிடப் பட்டு உள்ளது.


- தேவேந்திர பட்னவிஸ், மஹா., முதல்வர், பா.ஜ.,quote

Advertisement