மரவள்ளி கிழங்குக்கு போதிய விலை கேட்டு விவசாயிகள் முற்றுகை

ஆத்துார்: மரவள்ளி கிழங்குக்கு கூடுதல் விலை கேட்டு, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.


ஆத்துார் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளில் அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது. இரு மாதங்களாக மரவள்ளி கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மூட்டை(75 கிலோ) கிழங்கு, 230 முதல், 240 ரூபாய் அளவில் உள்ளது.இந்நிலையில் ஆத்துார், புதுப்பேட்டையில் உள்ள ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர் முன்னேற்ற நலச்சங்க அலுவலகத்தை, ஏராளமான பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள், நேற்று மாலை, 6:00 மணிக்கு முற்றுகையிட்டனர். அப்போது மரவள்ளி கிழங்குக்கு போதிய விலை கிடைக்கவில்லை என, கோஷம் எழுப்பினர்.
சங்க தலைவர் பிரபாகரன் பேச்சு நடத்தினார். அப்போது, 'விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காணலாம்' என உறுதி அளித்தார். இதனால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'உரம், மருந்து போன்ற செலவினங்களுக்கு பெற்ற கடனை கூட கட்ட முடியாத நிலை உள்ளது. மரவள்ளி கிழங்கு மூட்டைக்கு, 300 ரூபாய் விலை வழங்க வேண்டும்' என்றனர்.
தலைவர் பிரபாகரன் கூறுகையில், ''விவசாயிகளிடம் பேசிவிட்டு தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement