ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் அறிக்கையை காரணம்காட்டி ரூ.50 லட்சம் காப்பீட்டை நிராகரிக்க முடியாது; மும்பை ஐகோர்ட் அதிரடி

மும்பை: கொரோனா நெகட்டிவ் என கூறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கை மட்டுமே ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை நிராகரிப்பதற்கான ஒரே அளவுகோலாக இருக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட் கூறி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கொரோனா தொற்றுக்காலத்தின் போது மஹாராஷ்டிராவில் அஹில்யா நகர் மருத்துவமனை ஒன்றில் 1993ம் ஆண்டு முதல் செவிலியராக ஒருவர் பணிபுரிந்து வந்தார். தொற்றுநோய் காலத்தின் போது மருத்துவமனையில் பணியில் இருந்த போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 2021ம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார்.

இதையடுத்து, இறந்துபோன செவிலியரின் கணவரான மச்சீந்திர கெய்க்வாட் என்பவர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் இழப்பீடு வழங்குமாறு விண்ணப்பித்தார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகையை அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார். ஆனால், கொரோனா தொற்று இருந்தது என்பதற்கான ஆர்டிபிசிஆர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இழப்பீட்டு கோரிக்கையை அஹில்யாநகர் மாவட்ட கலெக்டர் தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, மச்சீந்திர கெய்க்வாட் தரப்பில், அவுரங்காபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய காப்பீட்டை அளிக்குமாறு அஹில்யாநகர் கலெக்டருக்கு கடந்த ஜன.9ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் அருண் பெட்னேகர், வைஷாலி ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

கோர்ட் உத்தரவை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட, இதை விசாரித்த நீதிமன்றம், மற்ற அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக தொற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்ததை குறிக்கம் போது, ஆர்டிபிசிஆர் அறிக்கை மட்டுமே இழப்பீட்டை நிராகரிப்பதற்கான ஒரே அளவுகோலாக இருக்க முடியாது என்று கூறி இழப்பீட்டை அளிக்க உத்தரவிட்டது. ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறும் பாதிக்கப்பட்டவரின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் உடனடியாக செயல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement