சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை

12

கராகஸ்: சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.



இது குறித்து, மரியா கொரினா மச்சாடோ கூறியதாவது: எனக்கு அதிகமான மக்கள் ஆதரவு இருக்கிறது. வெனிசுலாவை மாற்றுவதாக சபதம் செய்து உள்ளேன். நாட்டின் முதல் பெண் அதிபராக வேண்டும் என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன். ஒரு குறிக்கோள் உள்ளது. வெனிசுலாவை சிறந்த நாடாக மாற்ற போகிறேன்.


நான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இடமெல்லாம் சேவை செய்ய விரும்புகிறேன். வெனிசுலா மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.
நிக்கோலஸ் மதுரோவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அமெரிக்கா டெல்சி ரோட்ரிகஸை ஆதரித்தாலும், ஒரு நாள் வெனிசுலாவை வழிநடத்துவேன். இவ்வாறு மரியா கொரினா மச்சாடோ கூறினார்.


வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நேற்று அளித்தார். அதை டிரம்ப் ஏற்றுக் கொண்டாலும், 'அது அதிகாரப்பூர்வமாக மச்சாடோவுக்கே சொந்தமானது' என, நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.


ஏற்கனவே, வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரம்ப் கூறி வருகிறார். டிரம்பிடம் நோபல் பரிசை ஒப்படைத்த பிறகு, மச்சாடோ அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என தெரிவித்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement