ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு...  அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு

3

: ''ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, அரசு வேலை வழங்கப்படும்,'' என, மதுரை அலங்கா நல்லுாரில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல இடங்களில், தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு காளையை, சில ஆண்டுகளுக்கு முன், பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு சேர்த்ததை அடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

சிறப்பு சலுகைகள்





இந்நிலையில், 2017ல் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, மக்கள் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, அதிர்ந்து போன அப்போதைய அ.தி.மு.க., அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ., தலைவர்களை அணுகி, 'பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில் இருந்து, ஜல்லிக்கட்டு காளைக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியது.

இதற்கு, மத்திய பா.ஜ., அரசு ஒப்புதல் அளித்தது; பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, சில காலம் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள், மீண்டும் கோலாகலமாக தமிழகத்தில் நடக்கத் துவங்கின.

கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளைகளை வளர்ப்போருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்' என உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மதுரை அலங்காநல்லுாரில் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு, அரசு வேலை வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையில், அவர்கள் பணியமர்த்தப்படுவர் என, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.

தங்கக்காசு பரிசு





மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட, சிறப்பு விமானத்தில் மதுரை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அரை மணி நேரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்வையிட்டார்; சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கினார்.

பின், முதல்வர் பேசியதாவது:

மதுரை என்பது வீரம் விளைந்த மண். இந்த மண்ணில், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க வந்துள்ளேன்.

தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டுக்கு, கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கமும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் அறிவு வளர்ச்சிக்கு, கலைஞர் நுாற்றாண்டு நுாலகமும் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

பாரம்பரியமிக்க ஜல்லிக் கட்டு போட்டிகளில், அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கும் வீரர்கள், முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணியிடங்களில் அமர்த்தப்படுவர்.

அலங்காநல்லுார் பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறப்பு உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் அறிவிப்பு, ஜல்லிக்கட்டு வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியுள்ளதாக, மாடுபிடி வீரர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

@block_B@ ஏமாற்று அறிவிப்பு! கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு மாதந்தோறும் 1,---000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் கடந்த பின், இப்போது, 'மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுப்போம்' என, ஏமாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் ஒவ்வொருவருக்கும், கடந்த ஐந்தாண்டுகளில் கொடுக்கப்பட வேண்டிய 60,000 ரூபாய் ஊக்கத்தொகை இதுவரை கொடுக்கப்படவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து, யாரை ஏமாற்றலாம் என முதல்வர் நினைக்கிறார்? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,block_B
- நமது நிருபர் -

Advertisement