மீண்டும் குப்பை கிடங்காக மாற்றப்படும் அவலம்

உடுமலை: உடுமலை நகராட்சி பழைய குப்பைக்கிடங்கில், கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரியகோட்டை ஊராட்சி சார்பில் மீண்டும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பில், 60 ஆண்டுகளாக, பயன்படுத்தியகுப்பை கிடங்கு உள்ளது.

இதனைச்சுற்றிலும், காந்திநகர்-2, புஷ்ப கிரி வேலன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, 25 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்திற்கு குப்பை கிடங்கு மாற்றப்பட்டு, அங்கும் மூடப்பட்டு, கழிவுகள் நகராட்சி நுண் உரக்குடில்கள் வாயிலாக உரமாக மாற்றப்படுகிறது.

ஆனால், பழைய குப்பை கிடங்கில் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில், நகராட்சி சார்பில், இங்குள்ள 19 ஆயிரம் டன் கழிவுகள், 'பயோ மைனிங்' முறையில், ரூ.2.13 கோடியில் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், குப்பைக்கிடங்கு பகுதியில், பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு, மீண்டும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது.

எனவே, குப்பைக்கிடங்கை முழுமையாக மீட்கவும், பயனுள்ளதாக மாற்றவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement