அறியாமையை காட்டி அசிங்கப்படும் ராகுல்; பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறை சொல்கிறார்!

22

புதுடில்லி: பொருளாதார நிபுணர்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச அமைப்புகளும், ரேட்டிங் ஏஜென்சிகளும் இந்திய பொருளாதாரத்தை உலகில் அதிகம் வளர்ச்சி பெறும் பொருளாதாரம் என்று பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் எம்.பி., ராகுல் மட்டும், இந்தியப் பொருளாதாரம், இறந்த பொருளாதாரம் என்று மீண்டும் மீண்டும் கூறி, தன் அறியாமையை வெளிப்படுத்தி வருகிறார்.


தாய்நாட்டை அந்நிய மண்ணில் குறை கூறிப் பேசுவது காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு வழக்கம். அண்மை காலமாக இந்திய பொருளாதாரம் குறித்து, தாறுமாறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
50 சதவீத அமெரிக்க வரிகளும், நிச்சயமற்ற தன்மையும் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியாளர்களை மோசமாகப் பாதிக்கின்றன. வேலை இழப்புகள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறைந்து வருவது நமது இறந்த பொருளாதாரத்தின் யதார்த்தம்.

4.5 கோடிக்கும் அதிகமான வேலைகள் மற்றும் லட்சக்கணக்கான வணிகங்கள் ஆபத்தில் இருந்தாலும் பிரதமர் மோடி எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை அல்லது வரிகளைப் பற்றிப் பேசவில்லை. இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. தயவுசெய்து இந்த விஷயத்தில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

பாஜ காட்டம்



இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜ செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியதாவது: நாம் 11வது பெரிய பொருளாதார நாடாக இருந்த நிலையில், தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளோம் என்று கூறியது சர்வதேச நாணயம் நிதியம் தான்.

மேலும் இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரம் என்று அழைத்தது. ஐரோப்பிய ஒன்றியம் இந்திய பொருளாதாரத்தை பாராட்டி உள்ளது. பாஜ ஆட்சிக் காலத்தில் 9 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே இருந்ததாகவும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நயவஞ்சகர்



இந்தியா என்ன சொன்னாலும் சரி, எதை ஆதரித்தாலும் சரி, காங்கிரஸ் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, ஏனெனில் ராகுலுக்கு இந்தியாவுக்கு எதிரான ஒரு திட்டம் உள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முடிவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆனால் கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விரும்பவில்லை. இந்த மனிதர் ஒரு நயவஞ்சகர் மற்றும் பொய்யர். இவ்வாறு ஷெஹ்சாத் பூனவல்லா கூறியுள்ளார்.

உண்மை நிலவரம் என்ன?



இந்தியப்பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும், வரும் நிதியாண்டில் 6.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும், ஐஎம்எப் கணித்துள்ளது. உலகின் அதிக வளர்ச்சி பெறும் பொருளாதாரமாக இந்தியா தான் இருப்பதாக ஐஎம்எப் கணித்துள்ளது.

ஐ.நா., அமைப்பும் இந்தியப்பொருளாதாரம் 2026ல் 6.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என்று கணித்துள்ளது. உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம், முந்தைய ஆண்டு இருந்ததை காட்டிலும் நடப்பாண்டு அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

இப்படி ஒவ்வொரு சர்வதேச அமைப்பும், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உயர்வாக மதிப்பிடுகிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வென் டெர் லேயன், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பாராட்டி பேசியிருந்தார்.


உலக நாடுகளின் பொருளாதாரத்தை மதிப்பிடும் சர்வதேச ஏஜென்சிகளும், இந்திய பொருளாதாரத்தை உயர்வாக மதிப்பிட்டுள்ளன.
Fitch, CareEdge, ICRA, S&P போன்ற சர்வதேச ஏஜென்சிகளும், இந்திய பொருளாதாரம் உலகின் அதிவேக வளர்ச்சி பெறும் பொருளாதாரம் என்று பதிவு செய்துள்ளன.


எனினும், அறியாமை காரணமாகவோ, அரசியல் உள்நோக்கத்துடனோ ராகுல் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார்;இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் தான் அசிங்கம் என்று விமர்சகர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.

Advertisement