ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்

11

புதுடில்லி: ராகுல் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கேரள சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று நடக்கும் காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் எம்பி சசி தரூர் புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் திருவனந்தரபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் சசி தரூர். இவர் அண்மை காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திதோடு, சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு அடுத்ததாக கடினமான வேலையை செய்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீரை பாராட்டியிருந்தார். இதற்கு ஆதரவாக பாஜவினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், கேரள சட்டசபைக்கு இந்தாண்டு நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால், இந்தக் கூட்டத்தை கேரளாவைச் சேர்ந்த முக்கிய எம்பியான சசி தரூர் புறக்கணித்துள்ளார்.

கடந்த ஜனவரி 18ம் தேதி ராகுல் கொச்சிக்கு வந்திருந்த போது, கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் சசி தரூர் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே, அவர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement