எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

2

மதுரை: ''காங்கிரஸ் கட்சியினரின் தன்மானம் தான் முக்கியம். எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்,'' என மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.


தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., தளபதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, இரு கட்சிகளுக்கு இடையே மறைமுகமாக பனிப்போரை உருவாக்கியுள்ளது.



இந்நிலையில், மதுரையில் நேற்று மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி:
வரும் சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கோரும்; அதில் எந்த சந்தேகமும் இல்லை.



அத்தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்பதற்காகத் தான், நான் அகில இந்திய காங்., கமிட்டி தலைவரை சந்தித்து பேசினேன். லோக்சபா கூட்டத்தொடர் முடிந்த பின், மதுரை வடக்கு தொகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் போட்டு, கட்சியின் பலத்தைக் காட்டுவோம். சும்மா சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சிக் காரனுக்கு வந்தே மாதரம் என்றும் சொல்லத் தெரியும்; திருப்பி அடிக்கவும் தெரியும்.


காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப் படுத்துகின்றனரோ, இழிவாக பேசுகின்றனரோ அவர்களிடம் தயவு தாட்சண்யம் பார்க்கத் தேவையில்லை. கட்சி மற்றும் கட்சிக்காரரின் தன்மானம் தான் முக்கியம்.


தமிழகத்தில் காங்., கட்டமைப்பை பலப் படுத்தி இருக்கிறோம். கூட்டணியில் உள்ள காங்., தொண்டர்களை அவமானப்படுத்துகிற செயலை செய்த தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஒவ்வொரு காங்., தொண்டனின் கோரிக்கை.


'காங்கிரசுக்கு தொண்டர்கள் இல்லை; பூத் வார்டுகளில் நிர்வாகிகள் இல்லை' என்பது வன்மமான பேச்சு. அதை எதிர்க்கத்தான் செய்வோம். பேசியவர் மீது, தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்காக காத்திருக்கிறோம்.


'மதுரை வடக்கு தொகுதியில் காங்., போட்டியிடும்' என போஸ்டர் ஒட்டிய இளைஞர் காங்கிரசாரை பாராட்டுகிறேன். காங்கிரசுக்கு எதிரான தி.மு.க.,வினர் செயல்பாடுகள் குறித்து பேசத் துவங்கினால், நாட்கள் போதாது. தமிழக அரசை மீறி, என்னென்ன நடக்கிறது என்பது ஊருக்கெல்லாம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement