ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000

ராமநாதபுரம்: : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தையில், குண்டு மிளகாய் வற்றல் குவின்டால் 33,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரப் பகுதிகளில், அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்., மாதத்தில் மிளகாய் விதைப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது மிளகாய் செடிகள் வளர்ச்சி அடைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் நேற்று, ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தைக்கு புது வரவாக குண்டு மிளகாய் புதிய வற்றல்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

விவசாயிகள் கொண்டு வந்திருந்த குண்டு மிளகாய் புதிய வற்றல், 10 கிலோ மூட்டை 3,000 முதல் 3,300 ரூபாய் வரை விற்பனையானது.

மொத்தமாக, ஆர். எஸ்.மங்கலம் சந்தைக்கு ஒரு குவின்டால், அதாவது 100 கிலோ குண்டு மிளகாய் புதிய வற்றல் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததால், விலை உயர்ந்து, குவின்டால் 33,000 ரூபாய்க்கு விற்பனையானது.

குண்டு மிளகாய் பழைய வற்றல், கடந்த வாரம் குவின்டால் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், புதிய வற்றல் வரத்து குறைவால் குவின்டாலுக்கு 7,000 ரூபாய் உயர்ந்து, 17,000 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement