பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்

சென்னை: தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் சாரத்தை எடுத்துச் செல்ல, பசுமை மின் வழித்தடம் - 3 அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது.

ஆனால், திட்ட பணிகள் தொடர்பான விபரங்களை, தமிழக மின் வாரியம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

சூரியசக்தி, காற்றாலை உள்ளடக்கிய பசுமை மின் நிலையங்களை, தனியார் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக, 'கிரீன் காரிடார்' எனப்படும் பசுமை மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி செய்கிறது.

அதன்படி, தமிழகத்தில் பசுமை மின் வழித்தடம் - 1 திட்டத்திற்கு, மத்திய அரசு, 529 கோடி ரூபாய் நிதியுதவி செய்தது.

பசுமை மின் வழித்தடம் - 2 திட்டத்தில், மூன்று துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளுக்கு, மத்திய அரசு, 237 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மின் வாரிய நிதி மற்றும் ஜெர்மனி வங்கி கடனுதவியுடன், இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், பசுமை மின் திட்ட சாதனங்களின் விலை குறைந்துள்ளது. இதனால் தற்போது, பலரும் சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

பசுமை மின் வழித்தட திட்டம் - 3ன் கீழ், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைப்பதற்கு நிதியுதவி வழங்க, மத்திய மின் துறை முடிவு செய்து உள்ளது.

அதன்படி, தஞ்சையில் சாலியமங்கலம், பாபநாசம், கடலுார், கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் தொடரமைப்பு கழகம் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், அத்திட்டங்களுக்கான இடங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு, எந்த இடத்தில், எவ்வளவு திறன் உடைய துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன என்ற விபரத்தை, மத்திய மின் துறையிடம் மின் வாரியம் இன்னும் வழங்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், மத்திய அரசிடம் நிதியுதவி பெற தாமதமாகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பசுமை மின் வழித்தட திட்டம் - 3ன் கருத்துரு இறுதி கட்டத்தில் உள்ளது; விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பித்து, நிதியுதவிக்கு ஒப்புதல் பெறப்படும்; அதை தொடர்ந்து, திட்ட பணிகள் துவக்கப்படும்' என்றார்.

Advertisement