பாஜ சமூக வலைதள பிரிவு நிர்வாகி கைது; நயினார் கண்டனம்

3

சென்னை: குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம் பறிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.


அவரது அறிக்கை: வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரச் சம்பவம் குறித்து சமூகப் பொறுப்போடு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நமது தமிழக பாஜவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜை திமுகவின் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து தொலைபேசி வாயிலாக பிரவீன் ராஜின் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு, சட்டரீதியாக பிரவீன் ராஜூக்கு தமிழக பாஜ துணை நிற்கும் என்றும் உறுதியளித்தேன். குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம் பறிக்கிறது.



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது, சமூக வலைதளத்தில் பதிவிடுவோரை மட்டும் தேடித்தேடி கைது செய்யும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கர ஆட்சி கூடிய சீக்கிரம் தூக்கியெறியப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement