நானும் நாடகமும்! பாத்திமாபாபுவின் பாசம்

தமிழகம் முழுதும் இதுவரை என் இயக்கத்தில் உருவான 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' நாடகம் 13 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது.

மற்ற நாடகங்களை விட, இந்த நாடகத்திற்கு மேடை ஏறிய இடங்களில் எல்லாம் பெண்களிடம் அமோக வரவேற்பு. ஏனென்றால் இந்த கதையை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பார்க்கின்றனர். பொதுவாக குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் கசப்பு உணர்வு தோன்றுவது எல்லா வீடுகளிலும் இயல்பு. அதன் வீரியம் வேண்டுமானால் ஒரு குடும்பத்துக்கும், மற்றொரு குடும்பத்துக்கும் வேறுபடுமே ஒழிய அப்பாவுடன் மகன், மகள் களுக்கு கருத்து வேறுபாடு, கணவன், மனைவி இடையே மனக்கசப்பு இன்றி வாழவே முடியாது.

அதை தீவிரமாக சொன்ன நாடகம் தான் இது. இந்நாடகத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சரண், வசந்தபாலன் போன்றோர் பாராட்டி கடிதம் எழுதியதை பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரும் அழைத்து பாராட்டினார்.

பல பெண்கள் மேடை ஏறி தங்கள் குடும்பத்தில் இது போன்று நடந்ததாக கண்ணீருடன் தெரிவிக்கிற போது மிகவும் மனம் நெகிழ்ச்சியாக விடும். இந்த நாடகத்தில் மகன் வீட்டிற்கு செல்லும் அம்மா, மகன் போட்டு கொடுத்த காபிக்கு ரூ.50ஐ மேஜை மீது வைத்து விட்டு சென்று விடுவார். அதுபோல தான் நடந்து கொண்டதாக நாடகம் பார்த்த பெண் மேடை ஏறி கண்ணீர் விட்டதை மறக்க முடியாது.

டிவியில் செய்தி வாசித்து கொண்டிருந்த காலத்திலேயே மேடை நாடகங்களுக்கு வாய்ப்பு வந்தது. 'பஞ்சதந்திரம்' என் முதல் நாடகம். அதை துவக்கி வைத்தது மறைந்த இயக்குனர் பாலச்சந்தர். பிறகு அவரே ஒரு திரைக்கதையை எழுதி ஒரு நாடகத்தை நடத்திடவும் உதவினார். அதன்படி உருவானது தான் 'சேது வந்திருக்கேன்' என்ற 2வது நாடகம். பிறகு 'தாரமா தாலியா' என்ற நாடகத்தில் நடித்து முடித்தேன்.

அடுத்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இரு நாடகங்களில் நடித்தேன். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது கிடைத்தது சந்தோஷம்.

பிறகு அவரே தான் ஒரு கதையை எழுதி கொடுத்து, உன் குழுவை வைத்து நடத்திக் கொள் எனக்கூறி 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' நாடகம் உருவாக காரணமாக அமைந்தார். கடந்தாண்டு நடந்த கோடை நாடக விழாவில் 12 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் இந்நாடகத்திற்கு சிறந்த கதைவசனம், சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தன.

நான் சினிமா வாய்ப்பு தேடி செல்வதில்லை. நடிப்பு மீது எனக்கு தீராத காதல் உண்டு. நேரமும் கிடைப்பதால் நாடகங்களில் நடித்து வருகிறேன். எங்கு நடித்தாலும் அது நடிப்பு தான். அது மேடை நாடகங்களாக இருந்தாலும் சரி. வெள்ளித் திரை என்றாலும் சரி, சின்னத்திரை என்றாலும் சரி.

சினிமாவில் நல்ல காசு வரும். சீரியலில் நன்றாக சம்பாதிக்கலாம். மேடை நாடகங்களில் நேரடியாக மக்களிடம் பாராட்டு பெறலாம்.

சினிமா, சின்னத்திரை போல நாடகத்தில் 'ரீ டேக்' எடுக்க முடியாது. மக்கள் முன்னிலையில் நடிப்பது சவாலான காரியம். அது கத்தி மீது நடப்பது போன்றது. விரைவில் 'எண்ணி துணிக கருமம்' என்ற நாடகத்தை அரங்கேற்றவுள்ளேன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு நான் தான் என்றார் உற்சாகமாக.

Advertisement