ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்; தற்காலிகமாக ஒத்திவைப்பு

1

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.


தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஆண்டு டிச., 26ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 37வது நாளாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி துறை அலுவலகம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.


அமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கை: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்த, மூவர் குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்னை குறித்து முடிவு எடுக்கப்படும். போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிக்கு திரும்பி, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இது நம்முடைய அரசு என, முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து, போராட்டங்களில் ஈடுபடாமல், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல், பள்ளிக்கு தொடர்ந்து சென்று வரும் ஆசிரியர்களுக்கு நன்றி. மொத்தமுள்ள இடைநிலை ஆசிரியர்களில், பணிக்கு செல்லாமல் உள்ள 5,781 ஆசிரியர்கள் கற்பித்தல் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிகமாக ஒத்திவைப்பு



இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்க ளின் கல்வி நலன் மற்றும் நீண்ட நாட்களாக போராடி வரும் எங்கள் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.கற்றல் இடைவெளியை நீக்கி, முன்பை விட கற்பித்தல் பணியில் சிறப்பாக ஈடுபடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement