பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் வாலிபர் கைது; தீவிர விசாரணை

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., முகவர்களுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சப்ரா ராம், 28, என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜெய்ப்பூரில் உள்ள நேடன் கிராமத்தைச் சேர்ந்த சப்ரா ராம், சமூக வலைதளம் மூலம் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., முகவர்களுக்கு நம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.


இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு, அவர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணப் பரிவர்த்தனை குறித்தும், அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement