தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாடு; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

13


சென்னை: மாமல்லபுரத்தில் இன்று தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழகத்தின் பண்டைய கால பாரம்பரிய, கலாசாரம் உணர்த்தும் நினைவுச்சின்ன இடங்கள், இறைசக்தி மிகுந்த கோவில்கள், மனம், உடலிற்கு புத்துணர்வு அளிக்கும் இயற்கை சுற்றுச்சூழல் இடங்கள், உல்லாச பொழுதுபோக்கு கடற்கரை பகுதிகள் என, அதிகளவில் சுற்றுலா பகுதிகள் உள்ளன. உள்நாட்டு, சர்வதேச பயணியர் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ளதாக, மேலும், 300 புதிய சுற்றுலா மையங்களை தமிழக அரசு கண்டறிந்து, அப்பகுதிகளை மேம்படுத்தவும் முடிவெடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆசியாவில் சுற்றுலா முதலீட்டிற்கு ஏற்ற முக்கிய களமாக தமிழகத்தை உருவாக்க கருதி, உலகளாவிய சுற்றுலா மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தமிழக சுற்றுலாத்துறை, தொழில்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



முதல்வர் ஸ்டாலின், இன்று மாநாட்டை துவக்கி வத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொழில்துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


இந்த மாநாட்டில் வனம், மலைவாழிட சுற்றுலா, யுனெஸ்கோ அங்கீகார பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து, டிஜிட்டல் முறையில் கதையாக கூறுவது, விளையாட்டு, மருத்துவம், சாகசம் ஆகிய சுற்றுலாக்கள் குறித்தும் விவாதித்து, திட்டங்களுக்கு முடிவெடுக்கப்பட உள்ளன.

Advertisement