பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
குயிங்டாவோ: சீனாவில் ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது. இந்திய பெண்கள் அணி 'ஒய்' பிரிவில், கடந்த முறை (2024) பைனலுக்கு முன்னேறிய தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. ஆண்கள் அணி 'சி' பிரிவில் சிங்கப்பூர், ஜப்பானுடன் உள்ளது.
இந்தியா சார்பில் 10 வீரர், 9 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. கடந்த 2024ல் முதன் முறையாக சாதித்த இந்திய பெண்கள் அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குகிறது. இம்முறை நட்சத்திர வீராங்கனை சிந்து, காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இவர் இல்லாத நிலையில், தான்வி, ரக்சித்தா ஸ்ரீ, மாளவிகா, திரீஷா, காயத்ரி உள்ளிட்டோர் அணிக்கு நம்பிக்கை தரலாம்.
அனுபவம் நம்பிக்கை
இந்திய ஆண்கள் அணியில் லக்சயா சென், ஆயுஷ், பிரனாய், ஸ்ரீகாந்த், தருண், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2016, 2020ல் வெண்கலம் வென்ற இந்தியா, இம்முறை முதன் முறையாக பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம்.
இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி, மியான்மரை சந்திக்க உள்ளது. இந்திய ஆண்கள் அணி, சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.