டெண்டர் முறைகேடில் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

1


சென்னை: 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, டெண்டர் முறைகேடு வழக்கில், யாரையும் பாதுகாக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்' என, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


அ.தி.மு.க., ஆட்சியில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். சென்னை, கோவை மாநகராட்சியில், சாலை பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.


இது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயனுக்கு எதிராக வழக்கு தொடர, அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக, தமிழக அரசின் பொதுத்துறை செயலர், விஜிலன்ஸ் ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் தரப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர, மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம், வேண்டும் என்றே ஏற்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ''வழக்கு தொடர ஒப்புதல் கோரி அனுப்பிய கடிதம், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. எந்த அதிகாரியையும் பாதுகாக்கவில்லை. அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனத் தெரிவித்தார்.


இதையடுத்து, வழக்கு விசாரணையை, பிப்., 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement