மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் யும்னம் கெம்சந்த் சிங்

3


இம்பால்: மணிப்பூரின் முதல்வராக பாஜவை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங்,62, பதவியேற்றுக் கொண்டார்.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சியின் போது கூகி மற்றும் மெய்டி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இட ஒதுக்கீடு தொடர்பாகஎழுந்த இந்த கலவரத்தை அடுத்து அப்போதைய முதல்வர் பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு, பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி வரும் 12ல் முடிவடைகிறது.


இதைத் தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று(பிப்.,03) நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.


தொடர்ந்து கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக யும்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென் மற்றும் லோசி திகோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் அஜய் பல்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெற்று, இன்று மதியம் மத்திய அரசு உத்தரவிட்டது.

Advertisement