ஆபீசை சாணத்தால் சுத்தம் செய்த விவகாரம்; அதிகாரிகளுக்கு தேசிய ஆணையம் கெடு

5

நமது நிருபர்




கோவை: பட்டியலின அதிகாரி பயன்படுத்திய அலுவலகத்தை சாணத்தால் சுத்தம் செய்த விவகாரம் குறித்து, 5 நாட்களுக்குள் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் கிளை, அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளராக பணியாற்றியவர் பிரகாஷ் குமார். பட்டியலின அதிகாரி. இவரை, அதே கிளையில் பணியாற்றிய திமுக தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ், ஜாதிய பாகுபாட்டுடன் நடத்தினார் என்பது குற்றச்சாட்டு.

தன் அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்த பிரகாஷ் குமாரை, தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சசிராஜ் வேறு கிளைக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது. அவ்வாறு அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், அவர் பயன்படுத்திய அலுவலகம், மாட்டுச்சாணத்தால் சுத்தம் செய்யப்பட்டது. இது சசிராஜ் கூறியதன் பேரில் நடந்துள்ளது.

புகாரை தொடர்ந்து சசிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த 5 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement