பொய் பரப்புவதை நிறுத்திவிட்டு முதல்வரிடம் கேளுங்கள்; கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

31

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த திமுக எம்பி கனிமொழிக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.


மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது; நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகத்திற்கு, மஹாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் ஓட்டுக்களே பாஜவுக்கு முக்கியம். அவர்களின் வளர்ச்சியல்ல, எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த பல்வேறு ரயில்வே திட்டங்கள், திமுக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்காததால், கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.


ஆதாரத்துடன் அவர் விடுத்துள்ள அறிக்கையில்; திமுக எம்பி கனிமொழி உண்மை தெரியாமல் பேசி வருகிறார். அவரது சகோதரரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையிலான ஊழல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு அடைந்த தோல்வியால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 2025 டிசம்பர் வரை தமிழக அரசு வெறும் 24% நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் ஏராளமான திட்டங்கள் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதே நிலைதான் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் நிலவுகிறது. ஊழல் நிறைந்த திமுக அரசு திட்டமிட்டே முட்டுக்கட்டைகளைப் போடுவதால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.


எப்போதும் பொய்களைப் பரப்புவதை விட்டுவிட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க நிலம் கையகப்படுத்துவதற்கு இவ்வளவு தாமதம் ஏன்? என்று உங்களின் சகோதரரிடமே (முதல்வர் ஸ்டாலின்) கேள்வி கேளுங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Advertisement