விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது

6

ஆவடி: ஆவடியில் மின் இணைப்பு வழங்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(47). விவசாயியான இவர் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கோரி, கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து இருந்தார்.

அவரின் விண்ணப்பத்தை மின் வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன்(47) என்பவர் பரிசீலித்தார். பின்னர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.15,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத ராகவன், இது குறித்து திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராகவனிடம் போலீசார் தந்து, அதிகாரி பாலசுப்ரமணியனிடம் தருமாறு அறிவுறுத்தினர்.

அவரும், கோவில்பதாகை மின்வாரிய அலுவலகம் சென்று வருவாய் மேற்பார்வையாளரிடம் பணத்தை கொடுத்துள்ளார். லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement