குடிசை சுவர்களில் கல்வி ஓவியங்கள்; இந்திய ஆசிரியைக்கு உலக விருது

5

துபாய்: இந்தியாவில் குடிசைப்பகுதி சுவர்களை தன் ஓவியங்களால் நிரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆசிரியை ரூபல் நாகி, 'குளோபல் டீச்சர் பிரைஸ்' என்ற சர்வதேச விருதை வென்றுள்ளார்.


ஐம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் ரூபல் நாகி,45. இவர் கலை, கல்வி, சமூக சேவை ஆகியவற்றை இணைத்து தன் ஓவியத்தின் வாயிலாக ஏழை குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றி வரும் ஒரு ஆசிரியை.


இலவசக் கல்வி இந்தியாவில் ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்குள்ள சுவர்களை கல்வி ஓவியங்களாக மாற்றி, குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருகிறார்.


ரூபல் நாகி குடிசைப் பகுதிகளில் உள்ள சுவர்களில் பெரிய அளவிலான ஓவியங்களை வரைந்து, அவற்றின் மூலம் இலக்கியம், அறிவியல், கணிதம், வரலாறு உட்பட பல பாடங்களை கற்பிக்கிறார்.


இவரது 'ரூபல் நாகி ஆர்ட் பவுண்டேஷன்' மூலம் இதுவரை 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை அளிக்கின்றன.



அவரது இந்த சேவையைப் பாராட்டி, பல்வேறு நாடுகளில் பள்ளிகளை நடத்தி வரும் 'ஜெம்ஸ் எஜுகேஷன்' என்ற நிறுவனத்தின் 'வர்கி பவுண்டேஷன்' என்ற அமைப்பு, 'குளோபல் டீச்சர் பிரைஸ்' என்ற சர்வதேச விருதை அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெற்ற உலக அரசுகள் உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏழை இளைஞர்கள்



ரூபல் நாகி இந்த விருதைப் பெறும் 10வது வெற்றியாளர் ஆவார். இதற்கு முன் கென்யா, பாலஸ்தீனம், கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

ரூபல் நாகி தனக்கு அறிவிக்கப்பட்ட, 8.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வைத்து இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இது ஏழை இளைஞர்களுக்கு தொழில் திறன்களையும் டிஜிட்டல் கல்வியையும் வழங்க உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement