வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியம்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

7


புதுடில்லி: '' நமது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். அது இல்லாமல் எவ்வளவு உழைப்பு இருந்தாலும் அதனால் பயன் இல்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.


நாடு முழுதும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'பரீக்ஷா பே சர்ச்சா' எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். தொடர்ந்து 9வது ஆண்டாக நடக்கும் இந்நிகழ்வின், இரண்டாவது பதிப்பு இன்று ( பிப்.,09) நடந்தது. குஜராத்தின் தேவ்மோர்கா, தமிழகத்தின் கோவை, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், அசாமின் குவஹாத்தி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் நேரில் பங்கேற்றனர்.


மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறியதாவது: பல ஆண்டுகளாக ' பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி மூலம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். கற்றுக்கொள்வதற்காகவே மாணவர்களுடன் கலந்துரையாடுகிறேன். கற்றுக் கொடுக்க அல்ல.


எனது நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மனதிலும் 2047 ல் வளர்ந்த இந்தியா என்ற கனவு இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ந்த நாடுகளின் பழக்க வழக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை அணைத்து வைக்க வேண்டும். உணவுகளை வீணாக்கக்கூடாது. கழிவுகளை குறைக்க வேண்டும்.


நமது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் இல்லாவிட்டால், எவ்வளவு உழைப்பு இருந்தாலும் அதனால் பயன் இல்லை.


ஏஐ அல்லது மொபைலை நமது எஜமானார்களாக ஆக்கக்கூடாது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை திறமையாக பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏஐயை பார்த்து நாம் பயப்பட தேவையில்லை.


நமது வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனை குறைவாக எடைபோடக்கூடாது. 'நாம் விளையாட்டில் சிறந்து விளங்குகிறோம். அதனால் படிக்க தேவையில்லை' என யாரும் தவறாக நினைக்கக்கூடாது. உங்களுக்குள் என்ன திறமை இருந்தாலும் அதனை வளர்த்தக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement