'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி

2

சென்னை: இயந்திர கோளாறால், 'ஏர் இந்தியா' டில்லி விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், அதில் பயணிக்க இருந்த 165 பயணியர் அவதியடைந்தனர்.



சென்னையில் இருந்து டில்லி செல்லும் 'ஏர் இந்தியா' விமானம், இன்று காலை 6:00 மணிக்கு புறப்பட தயாரானது. 165 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் உட்பட 171 பேர், அதில் பயணிக்க விமானத்திற்கான 'கேட்' பகுதியில் காத்திருந்தனர். பயணியரை விமானத்தில் ஏற்றுவதற்கு முன், விமானிகள் விமானத்தின் இயக்கத்தை சரி பார்த்தனர். அப்போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரியவந்தது.


விமானத்தை இயக்கினால் சிக்கல் ஏற்படும் என்பதால், உடனே சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என, விமான நிறுவனம் அறிவித்தது.

பயணியர் அனைவருக்கும் ஓய்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பொறியாளர்கள் குழுவினர், கோளாறு சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். காலை 10:15 மணிக்கு ஏர் இந்தியா விமானம் பழுது பார்க்கப்பட்டு, நான்கு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றது.

எம்.பி.,க்கு மாற்று விமானம்




ஏர் - இந்தியா விமானத்தில் டில்லி செல்வதற்காக, தி.மு.க., - எம்.பி. கதிர் ஆனந்த் காத்திருந்தார். விமானம் தாமதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர், 'தான் அவசரமாக டில்லிக்கு செல்ல வேண்டும்; என்ன செய்வீர்கள் என தெரியாது; உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, 'ஏர் இந்தியா' ஊழியர்கள் அவரை மட்டும், காலை 6.55 மணிக்கு, சென்னையில் இருந்து டில்லி சென்ற மற்றொரு விமானத்தில் புறப்பட அனுமதித்தனர். மற்ற பயணியரும் 'மருத்துவ அவசரத்திற்காக செல்கிறோம்; எங்களையும் அனுமதியுங்கள்' எனக் கேட்டும், ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement